Monday 17 October 2016

தமிழ் பழகலாம் வாங்க - 5



எனது மகன், என்னுடைய மனைவி ... என்று எழுதுவது தவறு. “இல்” என்பது இட வேற்றுமை உருபு என்று நேற்று சொன்னேன் அல்லவா, அதுபோல, மேலே சொன்ன தொடர்களில் எனது என்பதில் உள்ள ”அது”, என்னுடைய என்பதில் உள்ள “உடைய” ஆகிய இரண்டும் உடைமைப் பொருளுக்கான வேற்றுமை உருபுகள்.
மகன், மனைவி நமது உடைமை இல்லை. நம் உறவு, உரிமை. எனவே உடைமைப் பொருள் வேற்றுமை உருபை உறவுகளுக்கு சேர்த்து எழுதக்கூடாது. என்னுடைய வீடு, அவனுடைய மாடு என்று எழுதலாம். ஆனால், எனது மகன் என்றோ அவனுடைய மனைவி என்றோ எழுதுவது தவறு. என் மகன் அல்லது எனக்கு மகன் என்றும், அவன் மனைவி அல்லது அவனுக்கு மனைவி என்றுதான் எழுத வேண்டும்.
மனித உறவுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் மொழி நம் தமிழ் மொழி.

Friday 14 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 4


அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வணிக மரபில் வந்த ஐந்து பேர் பற்றி ஒரு நூல் வெளியிட்டேன். அதற்கு “அறுபத்து மூவருள் ஐவர்” என்று தலைப்பிட்டேன். அதைப்படித்த ஒரு நண்பர், “அறுபத்து மூவரில் ஐவர்” என்று இருந்தால் படிக்க எளிதாக இருக்குமே என்றார்.
அவர் சொன்னபடி எழுதினால் அது இலக்கணப்பிழை ஆகிவிடும்.

சென்னையில் வசிக்கிறான், கடையில் விற்கிறார்கள்...இந்த தொடர்களில் சென்னையில், கடையில் ஆகியவற்றின் இறுதியில் உள்ள “இல்” வேற்றுமை உருபு. அதாவது ஒரு இடத்தின் பெயரோடு வருகின்ற வேற்றுமை உருபு. அதனால் இதை இடவேற்றுமை உருபு என்பார்கள்.

இட வேற்றுமை உருபை மனிதர்களின் பெயரில் சேர்க்கக் கூடாது. எனவே, “அறுபத்து மூவருள் ஐவர்” என்றே எழுத வேண்டும்.
”இவர்களில் யார் நல்லவர்” என்று எழுதுவது தவறு.. “இவர்களுள் யார் நல்லவர்” என்றுதான் எழுத வேண்டும்.


Thursday 13 October 2016

சொற்கோயில் ஜூலை 1- 15



”சொற்கோயில்” மாதம் இருமுறை ஆன்மீக இதழ், கடந்த  ஜூலை முதல் வெளியாகி, மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எழுத்துச் சித்தர் பாலகுமாரன், திரைப்பட வசன கர்த்தா கிரேசி மோகன், தன்னம்பிக்கை எழுத்தாளர் சோம வள்ளியப்பன் போன்ற பிரபலங்கள் தொடர்ந்து “சொற்கோயில் இதழில் எழுதி வருகின்றனர். ஆன் லைனில் வாசிக்க கீழ் உள்ள இணைப்பில் சொடுக்கவும்


                                     சொற்கோயில் ஜூலை 1 - 15



தமிழ் பழகலாம் வாங்க. 3



மனிதர்களை உயர்திணை என்றும் மனிதர் அல்லாத பிறவற்றை அஃறிணை என்றும் பிரித்தனர் நம் முன்னோர்.
அதாவது உயர் திணை, உயர்வு அல்லாத திணை. 
அல்லாத திணை, அல்திணை ஆகி, அஃறிணை என்றாயிற்று.
உயர்திணை, கீழ்திணை என்று சொல்லவில்லை. உயர்வு அல்லாத திணை என்று சொல்லி, மனிதர் அல்லாதவற்றுக்கும் மதிப்பு கொடுத்தனர் நம் முன்னோர்

Wednesday 12 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 2



தமிழைத் தவறாக எழுதுவது சிலருக்கு இயல்பு. அதில் அவர்களுக்கு ஒரு சுகம் போலிருக்கிறது.
ஒரு நாளிதழின் செய்திப்பிரிவில் நான் வேலை பார்த்தபோது, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என நான் எழுதியிருந்ததை, எனக்கும் மேலே உயர் பதவியில் இருந்தவர், “நீரழிவு நோய்”என்று மாற்றி எழுதினார். “நீரிழிவு நோய்” என்பதுதான் சரி என்றேன்.
எப்படி என்று கேட்டார்.
இழிதல் என்றால் இறங்குதல் என்று பொருள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அதிகம் இறங்கும். அதனால்தான் நீரிழிவு நோய் என்று பெயரிட்டனர் என்று விளக்கம் அளித்தேன்.
இணையத்தில் பார்க்கிறேன் என்று சொல்லி, இணையத்தில் பார்த்தார். நீரழிவு, நீரிழிவு என இரண்டு விதமாகவும் எழுதியிருந்தனர்.அதனால், நீரழிவு என்றே எழுதுங்கள் என உத்தரவிட்டார். தவறாகத்தான் எழுத வேண்டும் என்பது அவர் இயல்பு போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கவிதை நூல் வெளியிட்டேன். நூல் அச்சாகிக்கொண்டிருந்த அச்சகத்துக்கு, பேராசிரியர் ஒருவருடன் போனேன். அச்சக உரிமையாளர் வெளியில் போயிருந்தார். அங்கு வேலை பார்த்த சிறுவனிடம் பணம் கொடுத்து டீ, பிஸ்கட் வாங்கி வரச் சொன்னேன். வாங்கி வந்தான்.
பிஸ்கட் சாப்பிடு என்று, சிறுவனிடம் கொடுத்தேன்.
””எனக்கு வேணாம் நீ சாப்பிடு”” என்றான்.
பேராசிரியர் உடனே, “ தம்பி, அவர் உன்னைவிட எவ்வளவு மூத்தவர். நீ என்று சொல்லக்கூடாது. நீங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா சொல்லணும்” என்று சிறுவனிடம் கூறினார்.
அவன் சொன்னான்.....
”நீங்கன்னுதான் நான் சொன்னேன். உன் காதில் அப்படி விழுந்திருக்கு”
என்ன செய்ய முடியும். இவனைப்போலதான் அவரும் என்று நினைத்துக்கொண்டேன்
.

Tuesday 11 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 1



ஒரு மாணவன், ஒரு மனிதன் என்று சொல்கிறோம். இலக்கணப்படி இது தவறு. அஃறிணைக்குதான் ஒரு என்று பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரு வீடு, ஒரு மாடு என்று சொல்லலாம். உயர்திணைக்கு இவ்வாறு சொல்லக் கூடாது.

மாணவன் ஒருவன், மனிதன் ஒருவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஒரு மாணவன், ஒரு நடிகை என்று சொல்வது பெருவழ்க்காக வந்துவிட்டதால், அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்று ஒரு புதினம் எழுதி வெளியிட்டார் ஜெயகாந்தன். இந்தத் தலைப்பு, “நடிகை ஒருத்தி நாடகம் பார்க்கிறாள்” என்றுதான் இருக்க வேண்டும். ஜெயகாந்தனுக்குத் தமிழ் தெரியவில்லை” என்றார் ஒரு தமிழறிஞர்.
இதற்கு ஜெயகாந்தன் சொன்ன பதில்......
எனக்குத் தமிழ் தெரிகிறதோ இல்லையோ.....தமிழுக்கு என்னைத் தெரியும்.

Thursday 24 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 18



தமிழ் ருசிக்கலாம் வாங்க
==============================
ஒரு கடிதம், இரு உறவு.
+++++++++++++++++++++++++++

தன்னைப் பிரிந்து சென்ற கோவலனுக்குக் கவுசிகன் மூலம் ஒரு கடிதம் அனுப்புகிறாள் மாதவி. அதில் மாதவி எழுதியிருப்பதாக இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்....

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.
குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியொடு
இரவிடைக் கழிதற்குஎன்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்,
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.

கடிதத்தில் மாதவி கூறியிருப்பது இதுதான்....

அடிகளே உங்கள் முன் விழுந்து, உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். தெளிவற்ற என் சிறுமொழிகளை தயவு செய்து கேட்டருள வேண்டுகிறேன்.வயதான தாய் தந்தைக்கு அருகில் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல், உயர்குடியில் பிறந்த கண்ணகியுடன் புகார் நகரை விட்டு சென்றது ஏன்? அதுவும், ஊரைவிட்டு் யாருமே செல்ல விரும்பாத சிறப்பு மிக்க பூம்புகார் நகரைவிட்டு மனைவியுடன் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சென்றதற்கு, நான் செய்த தவறுதான் காரணமோ என்று என் மனம் சோர்வடைகிறது.அப்படி என்னுடைய தவறுதான் காரணம் என்றால், என்னுடைய சொல்லைப் பொருட்படுத்தாமல்,என்னை மன்னிக்க வேண்டுகிறேன். குற்றமற்ற அறிவை உடைய மேன்மை உடைய தங்களைப் போற்றுகின்றேன்.

இப்படி மாதவி எழுதிய மடலை வாசித்த கோவலன் மனம் நெகிழ்ந்தான். மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என்றும் ஆடல் மகள் என்னிடமே நடித்தாள் என்றும் சொல்லிப் பிரிந்தவன், இந்தக க்டிதத்தைப் படித்தபின் மாதவி குற்றமற்றவள் என உணர்கிறான்.
“என் பெற்றோரிடம் சொல்லாமல், ஊரை விட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, மாதவியின் இந்தக் கடிதத்திலேயே உள்ளது. எனவே, இந்தக் கடிதத்தை, நான் கொடுத்ததாக என் பெற்றோரிடம் கோண்டுபோய்க் கொடு” என்று கவுசிகனை அனுப்பி வைக்கிறான் கோவலன்,

காதலன் கோவலனுக்கு மாதவி எழுதிய கடிதம், அதையே, கோவலன் தன் பெற்றோருக்கு அனுப்பக் கூடியதாக இருக்கிறது. ஒரே கடிதம், காதலனுக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது. பெற்றோருக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது.

ஆஹா... இந்தக் கடிதத்தைஎவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறார் இளங்கோவடிகள்.